சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என அறிக்கை ஒன்றில் அப்பல்கலை குறிப்பிட்டுள்ளது.
தனது உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல், சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக குறிப்பிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஆறு ஆங்கில வழி சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் மூடப்படும் என பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பதினொரு உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் தமிழ் வழி பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பல்வேறு தரப்பினரும் பல்கலைக்கழகத்தின் முடிவை வரவேற்றனர்.
எனினும் அண்மைக்காலங்களில் தமிழ் வழி பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவு கண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த திடீர் அறிவிப்பால் இதனால் தமிழ் ஆர்வலர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
இதையடுத்து மீண்டும் அப்பாடப் பிரிவுகளைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தீர ஆலோசிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

