சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் தமிழ் வழி பாடப்பிரிவுகளை மூடுவது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு ஏதும் தெரியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அக்குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை அரசாங்கம் நீக்கப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 11 உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ் வழியிலான இயந்திரவியல், கட்டடவியல் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதாக அப்பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
எனினும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தமிழ்வழி பாடப்பிரிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப்பாடப்பிரிவுகள் மூடப்படாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்.
"எனவே பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது," என்றார் அமைச்சர் பொன்முடி.

