சென்னை: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து சென்னை போக்குவரத்து காவல்துறை ரூ.43 கோடி அபராதம் வசூலித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்காக அத்தகைய குற்றத்துக்கான அபராத தொகை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த 24ஆம் தேதி வரை மட்டும் 15,231 வழக்குகள் பதிவாகி உள்ளன.
அபராதம் விதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 50 விழுக்காடு அளவுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அபராதம் விதிக்கப்பட்ட 28,023 வழக்குகளில் 13,035 பேர் மட்டுமே அபராதத் தொகையை செலுத்தி உள்ளனர் என்றும் அவர்களிடம் இருந்து ரூ.13 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகளை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

