சென்னை: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தற்போது 1,545 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. இதன்மூலம் 114,000 மாணவ, மாணவியர் பயனடைகின்றனர்.
இதையடுத்து கூடுதல் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கு ஏதுவாக ரூ.500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது அரசு.
இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்புக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த இயலாது எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கணக்கெடுப்பு நடத்தி, ஜூலை மாதத்தில் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

