சென்னை: ஜப்பான் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தின் தொழில், பொருளியல் மேம்பாட்டுக்குப் பங்களிக்க முதலீட்டாளர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் உதவியோடு நடைபெற்ற இம்மாநாட்டில் அந்நாட்டின் 80 நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஜப்பான் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக எங்கள் மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நாங்கள் பயணம் மேற்கொண்டு வருகிறோம். அந்த வரிசையில், முதல் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பானுக்கு வந்துள்ளேன்.
“இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
“இந்தியாவுக்குள், ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக விளங்குவதில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
ஜப்பானைச் சேர்ந்த மிகப்பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்ட முதல்வர், அந்நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிட்டார்.
“ஜப்பான், இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில் மூன்று தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
“தமிழ்நாட்டில், அதிக எண்ணிக்கையிலான ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர்.
“ஜப்பானில் உள்ள மிகப்பெரும் வங்கிகளான, பேங்க் ஆஃப் டோக்கியோ உள்ளிட்ட மூன்று வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“மேலும் பல ஜப்பானிய மாகாணங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக, தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது என்றும் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடுகளை மேற்கொள்ள விழையும் ஜப்பானிய நிறுவனங்கள் இந்நிலைப்பாட்டை சற்றே விரிவுபடுத்தி, மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.