சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே இருவருக்கும் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், காவல்துறையின் இந்நடவடிக்கைக்கு பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார் பழனிசாமி. அப்போது தனது வேட்புமனுவுடன் தனது சொத்துகள் தொடர்பான பிரமாண பத்திரம் ஒன்றை அவர் தாக்கல் செய்திருந்தார்.
அதில் தமது சொத்து மதிப்பு குறித்து பழனிசாமி தவறான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்துக்கு இணையம் வழி புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். இப்புகார் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சாட்சியாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் மிலானி தமது மனுவில் கோரியுள்ளார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தை காவல்துறை சாட்சியாகச் சேர்த்துள்ளது.

