சென்னை: விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவல்துறை விசாரணையில் நீதிமன்றமும் தலையிடுவது இல்லை என்பதை காவல்துறையினர் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நெல்லையில் விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கி காவல்துறையினர் சித்திரவதை செய்ததாக அண்மையில் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் சேலம் மாவட்டம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணைக்காக முன்னிலையாகுமாறு தமக்கு அழைப்பாணை வந்திருப்பதாகவும் அவ்வாறு விசாரணைக்குச் செல்லும்போது தம்மை துன்புறுத்தக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறைக்கு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் ரஜினி கோரியுள்ளார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறை விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் காவல்துறை தங்களைத் துன்புறுத்தக் கூடாது என்ற கோரிக்கையுடன் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.
"காவல்துறை விசாரணையில் நீதிமன்றம் தலையிடுவதில்லை. எனினும் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு யாரையாவது துன்புறுத்தியதாக நீதிமன்ற கவனத்துக்கு தகவல் வந்தால் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க இயலாது," என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

