மு.க.ஸ்டாலின்: இந்தியாவுக்கு வளமும் பெருமையும் சேர்க்கிறது தமிழகம்
சென்னை: ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டின் முதல்வராக தாம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்தியாவுக்குப் பெருமையும் வளமும் சேர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஜப்பான், இந்திய நட்புறவு புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும் என்றார்.
“தமிழ்நாட்டின் தொன்மையையும் பழமையையும் கீழடியும் பொருநையும் இன்று ஒட்டுமொத்த உலகுக்கும் அடையாளம் காட்டி வருகிறது.
“தமிழகத்தில் அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக திமுக ஆட்சி செயலாற்றி வருகிறது. தமிழக அரசின் திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி உள்ளன.
“இப்படிப்பட்ட நிலையில்தான், தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
“இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான நட்பு என்பது பரந்த அடிப்படையில், செயல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைக்கிறது.
“வர்த்தக உறவுகளையும் தாண்டிய நட்புறவாக அது அமைய வேண்டும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே ஆன ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், ‘மீண்டும் ஜப்பான் - துடிப்பான இந்தியா - புதிய பார்வைகள் புதிய பரிமாற்றங்கள்’ என்று அதற்குத் தலைப்பு தரப்பட்டு இரு நாடுகளிலும் கலாசார விழாக்கள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய கலாசார தொடர்புகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின், 1997ஆம் ஆண்டு மேயர்கள் மாநாட்டுக்காக தாம் ஜப்பான் வந்ததை நினைவுகூர்ந்தார்.
சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை நிறைவேற்ற மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டும் கடந்த 2008ஆம் ஆண்டு ஜப்பானுக்கு வந்ததாக நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்துவர அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.