சேலம்: அண்மையில் திருடுபோன ஏழு சாமி சிலைகளை சேலம் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாகப் போலி சாமியார் ஒருவர் கைதானார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. அங்குள்ள மடத்தில் வைக்கப்பட்டிருந்த ஏழு சாமி சிலைகள் திடீரென மாயமாகின.
அக்கோவிலில் இரவு நேரக் காவலர்கள் யாரும் பணியில் இல்லை. அதையறிந்த திருடர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்து கைவரிசை காட்டினர்.
இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், குள்ளானூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்தான் சிலைகளைத் திருடியுள்ளார் என்பது தெரியவந்தது. 50 வயதான அவர் போலி சாமியாராக வலம் வந்துள்ளார்.
துரிதகதியில் செயல்பட்ட காவல்துறையினர் சக்திவேலை கைது செய்தனர். தனது வாக்குமூலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே மனைவியைப் பிரிந்துவிட்டதாகவும் அதன்பிறகு ஆன்மிக ஈடுபாடு காரணமாக சாமியாராக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பில்லி, சூனியம், மாந்திரிகம் என்று கூறி சிறப்புப் பூசைகளை நடத்தியதாலும் குழந்தைப்பேறு உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறியதாலும் அதிகமானோர் தம்மை நாடி வந்ததாக சக்திவேல் கூறியுள்ளார்.
"இந்தப் பகுதியில் கோவில் கட்ட திட்டமிட்டேன். அதற்குப் பணம் திரட்ட ஏதாவது கோவிலில் இருந்து சிலைகளைத் திருட முடிவு செய்தேன். காவல்துறை எப்படியோ கண்டுபிடித்துவிட்டது," என்று சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

