பழனிசாமி: சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, முதல்வர் பதவி விலகவேண்டும்
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளதாக அதிமுக தலைமை சாடி உள்ளது.
எனவே முதல்வர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் உடனடியாக விலகவேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.
திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர்களும் நடப்பு மாவட்டச் செயலாளர்களும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். அதில் பங்கேற்ற அதிமுக தொண்டர்கள் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
சென்னையில் ஏற்கெனவே பேரணி நடத்தி, ஆளுநரிடம் மனு அளித்திருப்பதால், சென்னை மாவட்டத்தில் எங்கும் ஆர்ப்பாட்டம் இல்லை என அதிமுக நிர்வாகிகள் முன்பே அறிவித்திருந்தனர்.
கள்ளச்சாராய மரணங்கள் நிகழ திமுக அரசின் அலட்சியப் போக்குதான் காரணம் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக பிரமுகர்கள் குற்றம் சாட்டினர்.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
"தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது எனில் அதற்கு மாநில முதல்வர் என்ற வகையில் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும்.
"கள்ளச் சாராயம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் மற்ற குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன," என அதிமுக பிரமுகர்கள் ஆர்்ப்பாட்டத்தின்போது குற்றம்சாட்டிப் பேசியதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

