நாகை: சாலை வசதி இல்லாத காரணத்தால் ஒன்றரை வயது குழந்தையின் சடலத்தை அதன் பெற்றோர் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்ற அவலம் ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலூர் மாவட்டத்தில் உள்ள அல்லேரி மலைக்கிராமத்துக்குப் போதுமான சாலை வசதிகள் இல்லை. இந்நிலையில் அங்கு வசித்து வரும் விஜி என்ற கூலித் தொழிலாளியின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை கடந்த வெள்ளிக்கிழமை பாம்பு தீண்டிவிட்டது.
குழந்தையுடன் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, சாலை வசதி இல்லாததால் மிகவும் தாமதமானது. இதனால் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் குழந்தையின் சடலத்துடன் அவசர சிகிச்சை வாகனத்தில் ஊர் திரும்பியபோது, சாலை வசதி இல்லை என விஜியும் அவரது மனைவியும் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டனர். இதனால் அங்கிருந்து ஏறத்தாழ பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு குழந்தையின் சடலத்தை ஏந்தியபடி நடந்தே ஊர் திரும்பி உள்ளனர். இது குறித்த காணொளிப்பதிவு வெளியானதை அடுத்து சமூக ஊடகங்களில் புதிய விவாதம் தொடங்கி உள்ளது.

