நாகை: வேதாரண்யத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1985-87ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பின் அதே பள்ளியில் சந்தித்துக்கொண்டனர் (படம்).
மாணவர்களுக்கு இப்போது 60 வயதாகும் நிலையில், அவர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் எட்டு பேருக்கு இப்போது 90 வயதாகிறது. மாணவர்களில் பலர் இன்று மருத்துவர், விஞ்ஞானி, காவல்துறை அதிகாரி என உயர் பதவிகளில் உள்ளனர்.
அண்மைய சந்திப்பின்போது ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் சிறப்புப் பரிசுகளும் வழங்கி மகிழ்ந்தனர் 60 வயதான மாணவர்கள். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து, ஆசிரியரைப் பாடம் நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். சில மாணவர்களுக்கு வகுப்பில் பிரம்படி வாங்கியது நினைவுக்கு வரவே, 90 வயதான ஆசிரியர்களிடம் சிறிய பிரம்பைக் கொடுத்து, மீண்டும் செல்லமாக அடிக்கக் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ஆசிரியர்களை அவரவர் வீடுகளுக்கு மாணவர்களே தங்கள் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

