சேலம்: சாலையில் செல்லும் சிறுமிகளை வழிமறித்து, முகவரி கேட்பதுபோல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்த இளையர் சேலத்தில் கைதானர்.
சரவணன் என்ற அந்த 31 வயது ஆடவர் மீது போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வலம் வந்த சரவணன், சாலையில் டி-சட்டை அணிந்து தனித்துச் செல்லும் சிறுமிகளைக் கண்டதும் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று அவர்களை அணுகுவார். பின்னர் முகவரி கேட்பதுபோல் பாசாங்கு செய்தபடியே சிறுமிகளிடம் பாலியல் ரீதியில் அத்துமீறுவார். சேலத்தைச் சேர்ந்த பல சிறுமிகளிடம் இருந்து இதுகுறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளை ஆய்வு செய்தபோது சரவணன் சிறுமிகளிடம் அத்துமீறிய காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து ஓட்டுநராகப் பணியாற்றி வரும் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பகலில் ஓட்டுநராகவும் இரவு வேளையில் இசைக்குழு ஒன்றில் பாடகராகவும் இருந்து வந்துள்ளார் சரவணன்.
ஏற்கெனவே கடந்த 2022ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் பிணை பெற்று வந்தவர், மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

