நெல்லை: மாமியார்-மருமகளுக்கு இடையே நடந்த சண்டை நாளடைவில் முற்றிப்போனதை அடுத்து, மாமியாரை தீர்த்துக் கட்ட விரும்பிய மருமகள் ஒருவர் ஆண் போல் காற்சட்டை, பனியன் அணிந்து, தலைக்கவசத்துடன் யாருமில்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இரும்புக் கம்பியால் தாக்கி மாமியாரைக் கொன்றுவிட்டு வெளியேறி உள்ளார்.
நெல்லை மாவட்டம், வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல், 63. இவரது மனைவி ராமலெட்சுமி, 58. இவர்களது மகன் ராமசாமி தனது மனைவி மகாலெட்சுமி, 27, இரு குழந்தைகளுடன் தன் அம்மா வீட்டின் பக்கத்திலேயே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது வீட்டில் இருந்த மளிகை சாமான்களைக் காணவில்லை என ராமலெட்சுமி மருமகளிடம் கேட்டதாகவும் இதனால் மகாலெட்சுமி கோபத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராமலெட்சுமியை ஆண் வேடத்தில் சென்ற மகாலெட்சுமி இரும்பால் அடித்துக் கொன்று, அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கச்சங்கிலியையும் பறித்துச் சென்றுள்ளார்.
நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமலெட்சுமி நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். சீதபற்பநல்லூர் காவலர்கள் சண்முகவேல் வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது உண்மை வெளியில் வந்தது. மருமகள் மகாலெட்சுமி நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

