விழுப்புரம்: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம் எனும் உடல்வித்தை விளையாட்டுப் போட்டி அண்மையில் அசாம் மாநிலத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்த துப்புரவுத் தொழிலாளியின் மகனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம், பெரிய காலணி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர், தனிநபர் மற்றும் குழுவாக விளை யாடும் கயிறு மல்லர் கம்பம் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.
விழுப்புரம் நகராட்சியில் ஹேமச்சந்திரனின் தாயார் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது 7,000 ரூபாய் சம்பளத்தில் படித்துள்ள ஹேமச்சந்திரன், மூன்று வேளை உணவு கூட சரியாக கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
வறுமைக்கு இடையே படிப்பைத் தொடர்ந்து, மல்லர் கம்பத்தில் தங்கம் வென்றுள்ள தமக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்று ஹேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
"நான் இப்போதுதான் பட்டப்படிப்பை முடித்துள்ளேன். அம்மாதான் சிரமப்பட்டு துப்புரவுப் பணியாளராக வேலைபார்த்து காப்பாற்றி வருகிறார். இரண்டாவது அனைத்துலகப் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். எனக்கு அரசாங்க வேலை கொடுத்தால் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்," என அவர் உதவி கோரியுள்ளார்.
தனது வீட்டில் பதக்கம் வைப்பதற்குக்கூட போதிய இடமின்றி வறுமை நிலையில் வாழ்வதால், அவரது நிலையை உணர்ந்து தமிழக அரசு உதவ வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

