கொச்சி: கேரளாவில் வட்டாட்சி யராகப் பதவியேற்ற ஒருவர் அன்று மாலையே பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
காலையில் மகிழ்ச்சி, மாலையில் சோகம் என அவருக்கு அன்றைய பொழுது முடிவுக்கு வந்தது.
கேரள மாநிலம், கொச்சியை அடுத்துள்ள ஆலுவா பகுதியின் வட்டாட்சி அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார் ராஷ்மோன். இவருக்கு கடந்த ஆண்டிலேயே கிடைத்திருக்க வேண்டிய வட்டாட்சியர் பதவி நீதிமன்ற வழக்கு காரணமாக தள்ளிப்போனது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் பதவி ஓய்வு பெற இருந்தார். அதனால் வட்டாட்சியர் ஆகும் விருப்பம் கைகூடவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் அரசாங்கத்திடம் இருந்து ராஷ்மோனுக்கு வந்த கடிதத்தில் அவர் அங்கமாலி நிலமெடுப்பு வட்டாட்சியராக நியமிக்கப்படுவதாகவும் உடனே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தகவல் அவருக்கு மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒருசேர அளித்தது. ஏனெனில், புதன்கிழமை அவர் பணி ஓய்வு பெற இருந்தார்.
இருப்பினும் பதவி உயர்வை உடனே ஏற்றுக்கொள்ள முடிவு செய்த அவர், புதன்கிழமை காலை தனது புதிய அலுவலகத்தில் வட்டாட்சியராகப் பொறுப்பேற்றார். அன்று மாலையே அவர் பணி ஓய்வு பெறுவதாக அடுத்த கடிதம் வந்து சேர்ந்தது.
இதையறிந்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்த போதிலும், வட்டாட்சியர் ராஷ்மோனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அவருக்கு புதன்கிழமை மாலை வழியனுப்பு விழாவையும் சிறப்பாக நடத்தினர்.