சென்னை: தனது தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கும் அவரது புகழுக்கும் காணிக்கையாக்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நவீன சிற்பி கருணாநிதி என்றும் அவர் தொடாத துறைகளே இல்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசும் திமுகவும் ஓராண்டு காலம் கொண்டாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினையை வெளியிடும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், காலஞ்சென்ற கருணாநிதி வகுத்த பாதையில்தான் தமிழக அரசின் அனைத்து துறைகளும் செயல்படுகின்றன என்றார்.
"சென்னை, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக தொழில் நிறுவனங்கள் உருவாக காரணம் கருணாநிதி. திராவிட மாடல் அரசு இன்று தொழில் புரட்சியை உருவாக்கி வருகிறது.
"சிங்கப்பூர், ஜப்பானில் உள்ளவர்கள் தமிழகத்தின் மீதும் திமுக அரசு மீதும் நல்ல மரியாதையை வைத்துள்ளனர். இந்தியாவில் முதலீடு செய்வதாக இருந்தால் தமிழகத்தில்தான் தொழில் தொடங்குவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
"ஜப்பானில் கருணாநிதி பெயரைச் சொன்னாலே அங்கிருக்கும் தமிழ் மக்கள் கைதட்டுகின்றனர். கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கான குழு விரைவில் அமைக்கப்படும்," என்றார் முதல்வர்்்் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் கருணாநிதி பெயரில் ஐந்தாயிரம் பேர் அமரும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றும் 25 ஏக்கரில் இந்த அரங்கம் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இளையர்களின் அறிவு குடியிருப்பாக பன்னாட்டு அரங்கம் அமையும் என்றார் முதல்வர்.

