திருச்சி: கன்னியாகுமரி விரைவு ரயிலைக் கவிழ்க்க சதி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எனினும், கடைசி நேரத்தில் தண்டவாளத்தில் ஏதோ பொருள் இருப்பதை ரயில் ஓட்டுநர் பார்த்து விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த கன்னியாகுமரி விரைவு ரயில் வழக்கம்போல் சுமார் 12.45 மணியளவில் விருத்தாசலம் நோக்கிப் புறப்பட்டது.
ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சமயபுரம் அருகே அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் சில பொருள்கள் இருப்பதை ஓட்டுநர் கவனித்துள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், வேகமாகச் சென்று கொண்டிருந்த ரயிலை நிறுத்த அவர் பெரிதும் முயற்சி மேற்கொண்டார்.
இதனால் ரயிலின் வேகம் குறைந்தபோதிலும், தண்டவாளத்தின் மேல் இருந்த பொருள்கள் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று நின்றது.
இதையடுத்து, ஓட்டுநர் ரயிலை விட்டு இறங்கி சோதனை மேற்கொண்டார். அப்போது தண்டவாளத்தின் மீது லாரி டயர் போடப்பட்டு, அதன் மீது மேலும் ஒரு டயர் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ரயில் மோதிய வேகத்தில் அந்த டயர்களில் ஒன்று ரயில் இன்ஜின் பகுதியில் சிக்கி இருப்பதைக் கவனித்தார் ஓட்டநர்.
இந்த விபத்து காரணமாக ரயிலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ரயிலைக் கவிழ்ப்பதற்காகச் சிலர் சதி வேலையில் ஈடுபட்டுள்ள தாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள கிராமத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

