சென்னை: இளையர்களுக்கு பயங்கரவாதப் பயிற்சி அளித்த குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நாடு முழுவதும் உள்ள சிலர் பல்வேறு வகையில் உதவி செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், தேசிய புலனாய்வு முகமை கடந்த சில மாதங்களாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டபோது 'பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் நிர்வாகிகளுக்கு பயங்கரவாத தொடர்புகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் பத்து பேர் உட்பட நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர். தமிழகத்தில் ஆறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பல ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அண்மையில் கைதான ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து ஐந்து பேரையும் பாதுகாப்பான தனி இடத்தில் வைத்து, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சத்தியமங்கலம் வனப் பகுதியில் இளையர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகக் கூறப்படும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

