சென்னை: ஓடுபாதையில் இருந்து விமானங்கள் நடைமேடைக்குச் செல்ல வசதியாக சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம், மோசமான வானிலை காரணமாக விமானச் சேவையில் ஏற்படக்கூடிய தாமதம் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் வந்து, செல்வதற்கு 95 நடைமேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
விமானங்கள் ஓடுபாதையில் இருந்து 'டாக்ஸி வே' எனப்படும் இணைப்புச் சாலைகளின் உதவியோடு நடைமேடைக்கு வந்து நிற்பது வழக்கும்.
இந்த நடைமுறைக்காக ஊழியர்கள் தங்கள் கைகளில் சமிக்ஞை (சிக்னல்) பலகைகளை தங்கள் கையில் ஏந்தி, விமானிகளுக்கு வழிகாட்டுவர்.
எனினும் சூறைக்காற்று, கனமழை போன்ற மோசமான வானிலை நிலவும்போது, தரைதள ஊழியர்களின் வழிகாட்டி சைகைகளை விமானிகள் பார்த்து விமானங்களை சரியாக கொண்டு வந்து நிறுத்துவதில் காலதாமதங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து ஐம்பது அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இனி விமானங்கள் 'டாக்ஸி வே'யில் இருந்து நடைமேடை நோக்கி திரும்பும்போது சுமார் 60 மீட்டர் தூரத்தில் இருந்தே இந்தப் புதிய கருவிகள் இயங்கத் தொடங்கும். அவற்றின் உதவியோடு செயல்பட்டு, விமானிகள் சரியான திசையில் சென்று நடைமேடைக்கு அருகே விமானங்களைக் கொண்டு வந்து நிறுத்த முடியும்.
இதனால் விமானச் சேவைகளில் இனி தாமதங்கள் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

