சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 90 விழுக்காடு குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
வேலூரைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியான விஷ்ணுப்பிரியா, தனது தந்தையின் மதுப்பழக்கத்தால் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இது தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தையும் விவாதங்களையும் எழுப்பி உள்ளது. மதுக்கடைகளை மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதன் மூலம் மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் தமிழக அரசு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்தகைய நடவடிக்கையின் மூலம் உயிரிழந்த சிறுமியின் ஆன்மா அமைதி அடைய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“சிறுமி விஷ்ணுப்பிரியா இறப்பதற்கு முன் எழுதி வைத்துள்ள கடிதத்ததில் குறிப்பிட்டுள்ள வரிகள் என் இதயத்தை வாட்டுகின்றன. ‘என் தந்தை மது அருந்துவதை நிறுத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை. எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்போதுதான் எனது ஆன்மா அமைதியடையும்,’ என்று சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
“விஷ்ணுப்பிரியாவின் வேண்டுதல் அவருடையது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பதின்ம வயதுக் குழந்தைகளின் மனநிலை இதுதான்,” என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.