வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது ஆவின் பால் பண்ணை. பால் பாக்கெட்டுகளை ஏற்றிச் செல்ல இங்கு நேற்று முன்தினம் (ஜூன் 6) வேன்கள் வந்தன.
வாகன எண்களைச் சரிபார்த்த பால்பண்ணை காவலாளி, ஒரே வாகன எண்ணில் இரண்டு வேன்கள் உள்ளே சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது டிஎன்23 ஏசி 1352 என்ற ஒரே எண்ணில் இரண்டு வேன்கள் பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றிக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தன. உடனடியாக அந்த இரண்டு வேன்களையும் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவற்றில் ஏற்றப்பட்ட பால் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்த பால் திருட்டுச் சம்பவம் குறித்து ஆவின் பால்பண்ணை நிர்வாகம் காவல்துறையில் புகார் செய்துள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளிடமிருந்து தினமும் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் பெறப்பட்டு பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. அவை சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வதற்கான புதிய ஒப்பந் ததாரர் ஜூன் 1ல் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இந்தத் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.