சென்னை: ஸ்டான்லி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திருச்சி, தர்மபுரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ மன்றம் மேற்்கொண்ட ஆய்வின்போது சில குறைபாடுகளைக் கண்டறிந்தது.
அவற்றின் அடிப்படையில் அம்மூன்று கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் என தகவல் வெளியானது. மேலும், அம்மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், எந்த மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்தாகாது என்றார்.
"தேசிய மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. அது தொடர்பான அறிக்கை தேசிய மருத்துவ மன்றத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
"ஸ்டான்லி, தர்மபுரி கல்லூரிகள் தொடர்ந்து இயங்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி, அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்ட நோட்டீசையும் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
திருச்சி மருத்துவக் கல்லூரியும் தொடர்ந்து செயல்பட விரைவில் அனுமதி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

