சென்னை: தமிழக அரசு சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை சென்னையில் அனைத்துலக புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எழுத்தாளர்களின் படைப்புகள், தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அனைத்துலக புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
"எந்த உலக மொழியாக இருந்தாலும், அம்மொழியில் உள்ள நல்ல எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் நாம் கொண்டாடும் விதமாக இக்கண்காட்சியை நடத்துகிறோம்.
"பிற மொழிகளில் உள்ள தரமான படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய ஏறத்தாழ ரூ.3 கோடியை தமிழக அரசு வழங்க இருக்கிறது," என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அடுத்த கண்காட்சியில் அதிக எண்ணிக்கையிலான அரங்குகள் அமைக்கப்படும் என்றும் புத்தகக் கண்காட்சியில் மதிப்புறு விருந்தினராக மலேசிய படைப்பாளர்கள் பங்கேற்பர் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு குறுகிய கால அவகாசத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முறை உரிய அவகாசம் இருப்பதால் கண்காட்சி சிறப்பாக நடைபெறும். காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின்போது புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

