மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படலாம்
சென்னை: இனி உரிய அனுமதியின்றி பொது இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இத்தகைய குற்றங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் பதாகைகள் வைப்பது அதிகரித்து வருகிறது.
உரிய அனுமதியைப் பெறாமல், பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளாமல் நிறுவப்படும் ராட்சத பதாகைகள் திடீரென சரிவதால் விபத்து ஏற்பட்டு அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதையாக உள்ளது.
அண்மையில்கூட கோவையில் ராட்சத பதாகை கீழே விழுந்து மூன்று பேர் பலியாகினர்.
இதற்கு முன்பும் பலர் இத்தகைய விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து விளம்பரப் பதாகைகளை வைப்பது தொடர்பாக மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
“திருத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் விளம்பர பலகை வைக்க முடியாது. அதேபோல் உரிமக்காலம் முடிந்ததும் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்,” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விபத்திற்கு காரணமான பதாகைகள், விளம்பரப் பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள தமிழக அரசு, விளம்பரப் பலகை, பதாகைகளால் விபத்து, உயிரிழப்பு நேர்ந்தால் அதனை வைத்த நிறுவனமோ, தனிநபரோ இழப்பீடு வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதன் மூலம் உயிரிழப்பு குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.