சென்னை: யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு இன்று அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக, தலை நிமிர்ந்து நிற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை நேற்று முன்தினம் திறந்து வைத்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
"தமிழக அரசின் 'தமிழ்நாடு வழிகாட்டி' அலுவலகத்தின் மூலமாக ஜனவரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
"இதன் மூலம் ரூ.203,279 கோடி முதலீடுகள் பெறப்பட்டு 196, 596 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
"இந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
'நான் முதல்வன் திட்டம்' என்பது தமது கனவுத் திட்டங்களில் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், இத்திட்டம் தொடங்கப்பட்டதன் வாயிலாக தொழிற்சாலைகளுக்கு தேவையான வருங்காலப் பணியாளர் வளத்தை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
"மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளையர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2,877 கோடி செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது.," என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

