ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் சேத்தூர் பகுதியில் 12 வயது சிறுமிக்குத் திருமணம் நடந்ததாக புகார் தாக்கலானதை அடுத்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
சிறுமியின் முகவரி, அவரை மணமுடித்த வாலிபரின் முகவரியைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அந்த இளம் வயது திருமணம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்து இருப்பதை அறிந்தனர்.
அந்தச் சிறுமிக்கும் மாரிமுத்து என்ற 22 வயது வாலிபருக்கும் உறவினர்கள் திருமணம் செய்து வைத்திருந்தனர்.
அதிகாரிகள் பிறகு மாப்பிள்ளை வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றடைய இரவு 10 மணியாகிவிட்டது. பலரையும் அதிகாரிகள் துருவித்துருவி விசாரித்தனர்.
மாப்பிள்ளையும் சிறுமியும் முதலிரவு அறைக்குச் சென்று இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இருவரையும் உடனே வெளியே அழைத்துவர உத்தரவிட்டனர்.
மணமக்கள் வெளியே வந்ததை அடுத்து அவர்களிடத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்தச் சிறுமியின் சொந்த அத்தை மகன்தான் அந்த வாலிபர் என்பதும் இருவரும் காதலித்து வந்ததை அடுத்து இருவீட்டாரும் பேசி திருமணத்தை நடத்தி வைத்ததும் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
உறவினர்களைக் கண்டித்து சிறுமியை மீட்ட அதிகாரிகள், சிறுமியை ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். புகார் தாக்கலானதை அடுத்து மாப்பிள்ளை மாரிமுத்து கைதானார்.
மாரிமுத்துவின் பெற்றோர், சிறுமியின் தந்தை ஆகியோர் மீதும் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

