சேலம்: அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற கட்சியினர் உழைக்க வேண்டும் என்றார்.
"திமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்த்து இருக்கிறோம். தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். பூத் கமிட்டி அமைக்கும் பணியும் முடித்திருக்கிறோம். இது சாதாரண பணி இல்லை. இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இதுபோன்ற கட்சிப் பணியாற்றும் அரசியல் கட்சி இருக்க முடியாது," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அடுத்த ஆண்டுதானே பாராளுமன்றத் தேர்தல் என திமுகவினர் லேசாக இருந்துவிடக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், முன்கூட்டியே நடைபெற வாய்ப்புள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட வேண்டும் என்றார்.்
"இன்று தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்துள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவர்கள் தயாராகி வருவது தெரிகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்காகச் செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய பட்டியலை அமித்ஷா வெளியிடுவாரா?
"பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு நாங்கள் கொண்டு வந்தோம். தமிழ் மொழியை செம்மொழி ஆக்கினோம். நெடுஞ்சாலை துறை மூலமாக பல திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின் மேலும் பல திட்டங்களைப் பட்டியலிட்டார்.

