கிருஷ்ணகிரி: தங்கள் கிராமத்தில் தீயசக்திகளின் ஆதிக்கம் இருப்பதாக அஞ்சி, அங்கு வசித்த ஒட்டுமொத்த மக்களும் வனப்பகுதியில் தற்காலிகமாகக் குடியேறினர்.
சிறப்புப் பூசைகளுக்குப் பின்னர் அத்தீய சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதாகக் கூறி அம்மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கூளியம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஒம்பலகட்டு கிராமம்.
அங்கு அண்மைக்காலத்தில் பல்வேறு மரணச் சம்பவங்கள் நிகழ்ந்தன. எதிர்பாராத சம்பவங்களால் கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சில தீய சக்திகள் ஊருக்குள் புகுந்துவிட்டதாகப் பெரியவர்கள் கூறியதையடுத்து, அச்சக்திகளை விரட்டியடிப்பது என முடிவாயிற்று.
இதையடுத்து ஒட்டுமொத்தமாக ஊரைக் காலி செய்துவிட்டு அருகிலுள்ள வனப்பகுதியில் குடியேறி பாதுகாப்பாகத் தங்கி இருப்பது என்றும் அங்கிருந்தபடியே தீய சக்திகளை விரட்டியடிப்பது என்றும் திட்டமிடப்பட்டது.
நேற்று முன்தினம் குழந்தைகள் முதல் முதியோர் வரை என ஊர் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.
ஆடு, மாடு, கோழிகள், நாய்கள் என தாங்கள் வளர்த்த கால்நடைகளையும் உடன் அழைத்துச் சென்றனர். இளையர்கள் சிலர் மட்டும் பாதுகாப்புக்காக ஊர் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
ஒம்பலகட்டு கிராமம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. கிராம மக்கள் ஒருநாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்துச் சாப்பிட்டனர்.
அதையடுத்து இரவு சிறப்புப் பூசை நடைபெற்றது. அதன் பின்னர் சாமி சிலைகளைக் கையில் ஏந்தியபடி பெண்கள் முன்னே செல்ல, ஊர் எல்லையை அடைந்ததும் ஆடுகளைப் பலியிட்டு வழிபட்டனர்.
அதன் பிறகு தங்களுடைய வீடுகளின் முன் கற்பூரம் ஏற்றி வழிபட்டு, வீடுகளுக்குச் சென்றதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

