சென்னை: வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக சென்னையில் பரபரப்பு நிலவியது.
சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள மிண்ட் சாலையில் ஏராளமான துணிக்கடைகள் உள்ளன.
நேற்று அதிகாலை வேளையில் இப்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. சுமார் மூன்று மணியளவில் அந்த வளாகத்தில் உள்ள ஒரு கடையில் தீ மூண்டது.
இதையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் அருகிலுள்ள கடைகளுக்கும் தீ பரவியது.
அவற்றுள் பெரும்பாலானவை துணிக்கடைகள் என்றும் இரண்டு நகைக்கடைகளும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டன என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மொத்தம் ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த ஐம்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் போராடிய பிறகே தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 11 கடைகள் இந்த விபத்தில் தீக்கிரையானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர்மல்கத் தெரிவித்தனர். தீ விபத்தின் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்றும் காவல்துறை விசாரிக்கும் எனக்கூறப்படுகிறது.
இந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை.

