சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு சென்ற மாதம் நடந்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் நூற்றுக்கு நூறு (99.9999019%) பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்.
ஆந்திராவைச் சேர்ந்த பேரா வருண் சக்கரவர்த்தி என்ற மாணவரும் இதே சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
மொத்தமாகப் பார்க்கையில் இந்த நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் சாதனை இதர அனைத்து மாநிலங்களையும் விட விஞ்சி நிற்கிறது.
தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.
நீட் தேர்வைச் சென்ற மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1.44 லட்ச மாணவ, மாணவிகள் எழுதினர். அவர்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் அதாவது 78,693 பேர் தேர்ச்சியடைந்துவிட்டனர்.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகவை என்ற அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2023-24ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேர்வு 490 நகர்களில் 3,000க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. தமிழகத்தில் மட்டும் 24 மாவட்டங்களில் 200 தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
தமிழகம் விழுப்புரம் மாவட்டம் மேலஓலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இது ஏறக்குறைய 100%க்குச் சமம்.
கவுஸ்தவ் பவுரி (716), சூர்யா சித்தார்த் (715), வருண் (715) ஆகிய இதர மூன்று தமிழக மாணவர்களும் இந்திய அளவில் முறையே 3, 6, 9வது இடங்களைப் பிடித்து இருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்கள் இதில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் இந்தியா முழுவதும் செயல்படும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து இளநிலைப் பட்டம் பெறலாம்.
மொத்தமாகப் பார்க்கையில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் தமிழக மாணவர்கள் அதிகமாக சாதித்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரபஞ்சன், நீட் தேர்வில் சாதனை அளவுக்கு வெற்றி பெற வேண்டுமானால் கடின உழைப்பும் கடும் பயிற்சியும் அவசியம் என்றார்.
தேர்வு நெருங்க நெருங்க நீட் தேர்வை ஒத்த ஜிடி எனப்படும் தேர்வுகளைப் பல முறை எழுதி எழுதிப் பார்க்க வேண்டும் என்று கூறிய திரு பிரபஞ்சன், எய்ம்ஸ் அல்லது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பேன் என்று தெரிவித்தார்.