ஆந்திரா, ஒடிசாவில் பதுங்கி இருந்து தொலைத்தொடர்புக்குப் புதிய வழி கண்டனர்
மதுரை: முடிந்தால் பிடித்துப்பார் என்று மதுரை நகர காவல்துறை அதிகாரிகளுக்குச் சவால்விடுத்த கஞ்சா வியாபாரிகள் இப்போது கம்பி எண்ணுகிறார்கள்.
மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த அந்தச் சந்தேக நபர்கள் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் தங்கி செயல்பட்டு வந்தனர்.
சில வாரங்களுக்கு முன் அந்த நபர்கள் தமிழக காவல்துறைக்கு ஒரு சவால் விடுத்தனர்.
"காவல்துறையினரின் ஜம்பம் எங்களிடம் பலிக்காது. முடிந்தால் எங்களைப் பிடித்துப் பாருங்கள்," என்று அந்தப் போதைப்பொருள் கடத்திகள் விடுத்த சவாலை காவல்துறை ஏற்றது.
மதுரை நகர காவல் நிலையம் அந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க வியூகம் ஒன்றைத் தீட்டியது.
முதன்முதலாக மே மாதம் 10ஆம் தேதி ஒரு கும்பல் சிக்கியது. அந்தக் கும்பலிடம் 2,000 கிலோ கஞ்சா பிடிபட்டது. புலன்விசாரணையை அடுத்து ஜேகே எனப்படும் பி ஜெயகுமார், 35, என்பவரை அதிகாரிகள் தேடத் தொடங்கினர்.
ஜெயகுமார், ஏழு கஞ்சா வழக்குகள் உட்பட 26 வழக்குகளையொட்டி தேடப்பட்டார்.
இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் என்கின்ற எம் ராதா, 32, வாழைப்பழ சிவகுமார் என்ற ஜி சிவகுமார், 38, ஜோஸ் என்கின்ற மெர்வின் ஜோஸ், 24 ஆகியோருடன் சேர்ந்துகொண்டு ஜேகே காவல்துறைக்குச் சவால் விடுத்து இருந்தார்.
பல கோணங்களில் புலன்விசாரணை நடத்தி வந்த மதுரை நகர காவல்துறையைச் சேர்ந்த சிறப்புக்குழு, ஒடிசா சென்று முதலில் ஜேகேவை கைது செய்தது.
தொடர்ந்து ஆந்திராவில் இதர மூவரும் பிடிபட்டனர் என்று மதுரை காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மேலும் சில சந்தேகப் பேர்வழிகளுக்குப் பங்கு இருக்கிறது. அவர்களையும் விரைவில் பிடித்துவிடுவோம் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, பல மாநிலங்களில் இருந்தும் கஞ்சாவை அடிமாட்டு விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் பெரும் விலைக்கு விற்றுவந்த அந்தக் கும்பல், கைப்பேசிகளைப் பயன்படுத்தினால் சிக்கிக்கொள்வோம் என்பதற்காக மோடம் (modem) அடிப்படையிலான இணையத் தொடர்பைப் பயன்படுத்தி வந்தது.
அனைத்துலக பண பரிவர்த்தனைகளிலும் அந்தக் கும்பல் ஈடுபட்டு இருக்கிறது. இதன்தொடர்பில் வருமான வரித்துறைக்குத் தாங்கள் கடிதம் எழுதப்போவதாக மதுரை நகர காவல்துறை மேலும் தெரிவித்தது.

