சென்னை: தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த ஒரு மாதத்தில் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்காக 18 லட்சத்து 49,990 ரூபாய் மதிப்புள்ள 2,447 குவிண்டால் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற செயல் முறியடிக்கப்பட்டது.
"அரிசியுடன் 269 எரிவாயு உருளைகள், 180 கிலோ கோதுமை, 1,100 கிலோ துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் 450 லிட்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடத்தலில் ஈடுபட்ட 561 நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
"விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரு கிறார்கள்.
"பதுக்கலில் ஈடுபடுவோர்மீது, வழக்குப் பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.