சென்னை: தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியை நீதி மன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், புழல் சிறைத்துறை நிர்வாகத்தின்கீழ் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்டார். அதனால் பாதுகாப்புப் பொறுப்பை ஆயுதப் படை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து துணை ராணுவப் படையினர் நேற்று வெளியேறினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நிதி அமைச்சரான தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக மின்சாரத் துறையையும் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் வழங்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இலாகா ஒதுக்கீடு விவரங்களை அவர் ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.
அதன் பின்னர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே, புழல் சிறைத்துறை நிர்வாகத்தின் கீழ் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்டுள்ளதால், அவரை சந்திக்க குடும்பத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அவரைச் சந்திக்க புழல் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

