சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் என்ற முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவர் 10,500 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும்.
ராஜேஷ் தாஸ் உத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியைப் பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, 2021 பிப்ரவரி 21ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவரது பாதுகாப்புப் பணிகளைக் கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.
பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியைச் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியைப் பறிக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு அவர் உத்தரவிட்டார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரிடம் புகார் செய்திருந்தார்.