சென்னை: தமக்குப் பிணை வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை எட்டு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அண்மையில் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. அதன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஓட்டுநர், நடத்துநர் பணி வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. அந்த வழக்கில்தான் அவர் இப்போது கைதாகி உள்ளார்.
எனினும் கைது நடவடிக்கைக்குப் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவின்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சையில் இருந்தாலும் அவர் நீதிமன்றக் காவலில்தான் உள்ளார் என்றும் அவரை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு அவசியம் எழவில்லை என அவரது தரப்பு வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியை எட்டு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.
இதற்கிடையே, வரும் 20ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி உள்ளது.

