சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி (படம்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நடவடிக்கைகளை அங்குள்ள கண்காணிப்புக் கருவிகள் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எட்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கான ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதையும் கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் வழி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார் செந்தில் பாலாஜி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு விரைவில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி எதிர்வரும் 23ஆம் தேதி மாலை வரை அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க இயலும். அதன் பின்னர் அவர்மருத்துவ மனையில் இருந்தபடியே காணொளி வசதி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவாகும். அவரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எட்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த மறுநாளே அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவ்வாறு நடக்கவில்லை.
அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதால் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு சனிக்கிழமையன்று மயக்க மருந்தியல் பரிசோதனை நடைபெற்றது. இதன் காரணமாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக்குமாரிடம் 20ஆம் தேதி விசாரணை நடத்த உள்ள அதிகாரிகள், அவரிடம் பெறும் தகவல்களின் அடிப்படையில்தான் அமைச்சரிடம் விசாரணையைத் தொடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறை விசாரணை தொடங்கும் பட்சத்தில், தற்போது செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் தமிழக சிறைத்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படும். அதன் பிறகு மத்திய காவல் படையின் பாதுகாப்பு அளிக்கப்படும்.
அதுவரை மருத்துவமனை வளாகத்தில் அமலாக்கத்துறை சார்பில் கண்காணிப்புக் கருவிகள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை கண்காணித்து வரும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

