சென்னை: நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை தரக் குறைவாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக தம்மை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்றும் தாம் பதிலடி கொடுத்தால் திமுகவால் தாங்க இயலாது என்றும் குஷ்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகை குஷ்பு குறித்து மிக மோசமான முறையில் விமர்சித்தார்.
அவரது பேச்சு குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பதிவிட்டனர். அவருக்கு கண்டனமும் தெரிவித்தனர். இதுபோன்ற பேச்சுகளை வைத்து திமுகவில் நிலவும் அரசியல் கலாசாரத்தை தெரிந்து கொள்ளலாம் என்று குஷ்புவும் கருத்து தெரிவித்திருந்தார்.
“இந்த ஆபாச பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன், இவ்வாறு பேசுபவர்களுக்கு அப்போதுதான்தான் புத்தி வரும்,” என்று குஷ்பு காட்டத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பேச்சாளர் குறித்து குஷ்பு கோபத்துடன் பேட்டி அளித்த சில மணி நேரங்களுக்குள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைதானார். இந்த நடவடிக்கையை வரவேற்று பல்வேறு தரப்பினரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
இதற்கிடையே, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என திமுகவில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.