செந்தில் பாலாஜியின் இலாகாக்கள் இரு அமைச்சர்களிடம் ஒப்படைப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி இனி இலாகா இல்லாத அமைச்சராகச் செயல்படுவார். அவரிடம் இருந்த இலாகாக்கள் நீக்கப்பட்டுள்ள தகவல் தமிழக அரசின் அரசு இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இதையடுத்து அவர் பொறுப்பு வகித்த இலாகாக்கள் அனைத்தும் அமைச்சர்கள் தென்னரசு, முத்துசாமி ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலாகா மாறுதலை ஏற்றுக்கொண்டு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதியே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜி நேர்மை தவறியதற்காக குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதாலும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும் அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பதை ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் இரு அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.

