சென்னை: தி.நகரில் செயல்படும் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி மர்மநபர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
விளம்பரத்தைக் கண்டு இளையர்கள் பலர் மோசடி கும்பலிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர். துணை நடிகர்கள், துணை நடிகைகளாக நடிக்கவும் சிலர் விண்ணப்பம் செய்து பணம் கொடுத்துள்ளனர்.
பணத்தைக் கொடுத்தவர்கள் வாய்ப்புகேட்டு சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்றபோது தான் அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது.
மோசடிக்காரர்கள் பயன்படுத்திய இரு தொலைபேசி எண்களும் புகார் கடிதத்தில் இணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தற்போது புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் மோசடி கும்பல் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

