தேனி: அரிக்கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் இருந்தாலும் உடல் உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வப்போது காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் அரிக்கொம்பன் யானை இடையில் தொடர்ந்து அரிசி சாப்பிட்டு வந்ததால் அதன் உடல் உப்பிசமாக காணப்பட்டது என்றும் தற்போது காட்டு உணவு, புல் சாப்பிடுவதால் அதற்கு வன விலங்குக்கான உடல்வாகு வந்துள்ளது என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அரிக்கொம்பன் யானை உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அடுத்த 15 நாள்களில் அந்த யானை பழைய நிலையை அடைந்துவிடும் என்றும் அதன் நடமாட்டம் மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் மேலும் கூறினர்.
அரிக்கொம்பன் யானை அவ்வப்போது தேனி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இந்நிலையில் வனத்துறையினர் அதைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டு வந்துள்ளனர்.