சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உலகத்தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான திட்டம் லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து செயல் படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்பில் இந்தத் தாவரவியல் பூங்கா அமைய உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக அரசுத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்ட அறிக்கை தயாரிப்புக்காக மட்டுமே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
“137 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. இத்திட்டம் 2027ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும்.
“இந்தத் திட்டத்தில், பூர்வீக இனங்களின் தோட்டம், ஆர்போரேடம்ஸ், பேம்புசிடம்ஸ், மரக்கன்றுகள், ஹீலிங் கார்டன், மூலிகைத் தோட்டம், ரோஜா தோட்டம், ராக்கரி, ஜப்பானிய தோட்டம், பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு போன்ற கூறுகளும் இடம்பெற்றிருக்கும்,” என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் புதிய தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும் மிதிவண்டி ஓட்டுவதற்கும் தனி இடங்கள் இருக்கும் என்றும் விளையாடுவதற்கு தனிப்பகுதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாவர உயிரியலின் பன்முகத்தன்மை பற்றி மாணவர்களுக்கு எடுத்துக்கூறும் விதமாக கல்வித்திட்டம் ஒன்றை வகுக்கவும் தமிழக அரசு தீர்மானித்துள்ளது. மேலும் குழு ரீதியாக பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளன.


