மதுராந்தகம்: அச்சரப்பாக்கத்தில் இருந்து வெங்கடேசபுரம் வழியாக பல கிராமங்களுக்குச் செல்லும் சாலை குறுக்கே ரயில் பாதை வருகிறது.
அந்தப் பாதையைத் திறந்து மூடும் வேலையை ஆனந்த் என்பவர் பார்த்து வந்தார்.
அவர் அந்த வழியே ரயில்கள் வரும்போது பாதையை மூடி ரயில் சென்ற பின்னர் திறக்க வேண்டும்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற ரயிலுக்காக வழியை ஆனந்த் மூடிவிட்டார்.
ரயில் சென்ற பிறகு அந்த வழியைத் திறக்காமல் ஆனந்த் ஓய்வறைக்குச் சென்று கதவை உட்பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிவிட்டார்.
நெடுநேரம் ஆகியும் வழி கிடைக்காததால் சாலையில் இருபுறமும் காத்திருந்த வாகனங்களும் பொதுமக்களும் சந்தேகம் அடைந்து ரயில்வே அறைக்குச் சென்று பார்த்தபோது ஊழியர் ஆனந்த் குறட்டைவிட்டுத் தூங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கதவை இடிஇடி என்று இடித்து ஆனந்தை எழச்செய்தனர். ஆனந்த் தான் செய்த தவறை அறிந்து உடல் நடுங்கினார். வாகன ஓட்டுநர்கள் அவரை திட்டித் தீர்த்தனர். இந்தச் சம்பவம் பற்றி புலன்விசாரணை நடந்து வருகிறது.

