மதுரை: சென்னை, மதுரை காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சிடம் ‘இந்தியன் ரிப்போர்டர்’ இதழின் ஆசிரியர் வாராகி கடந்த மே மாதம் அவர் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் டேவிட்சன் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் தலைமையகத்திற்கு கடந்த செவ்வாய்க் கிழமை மாற்றப்பட்டார். போலி கடவுச்சீட்டு தொடர்பில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் டேவிட்சனிடமும் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

