சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் பல்வேறு சிறப்பு அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு அனைத்து கல்வி நிறுவன நிர்வாகங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என செல்வ விநாயகம் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் தற்போது எலிக் காய்ச்சல், டெங்கி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மருத்துவமனைகளின் காய்ச்சல் பிரிவுகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.