சென்னை: தென்கிழக்கு ஆசியாவின் முதல் மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சென்னை அண்ணா மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஜூலை 1ஆம் தேதியான இன்றுடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைகிறது.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது அண்ணா மேம்பாலம்.
இந்த மேம்பாலத்தின் அருகில் 1976ஆம் ஆண்டு வரை ஜெமினி ஸ்டூடியோ செயல்பட்டு வந்ததால், ஜெமினி மேம்பாலம் என்றும் பொதுமக்கள் குறிப்பிட்டு வந்தனர்.
கடந்த 1971ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24 லட்சத்தை கடந்திருந்த நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைச் சமாளிக்க அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது.
“மொத்தம் 1,500 டன் எஃகு, 3,500 டன் சிமென்ட் கொண்டு, ரூ.66 லட்சம் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த முதல் மேம்பாலம் இதுவாகும். 21 மாதங்களில் இதைக் கட்டி முடித்தனர்.
“மும்பையில் உள்ள கெம்ஸ் கார்னர், மரைன் டிரைவ் ஆகிய இடங்களில் அமைந்த மேம்பாலங்களைத் தொடர்ந்து இந்தியாவில் கட்டப்பட்ட மூன்றாவது மேம்பாலம் இதுவாகும். அதே நேரத்தில் இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாகவும் விளங்கியது,” என வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


