சென்னை: அண்ணா சாலையில் ரூ.621 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான தேனாம்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்ணா சாலை எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அவ்வப்போது அதைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், வாகன நெரிசல் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், அண்ணா சாலையில், தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை, 621 கோடி ரூபாயில், நான்கு வழிச் சாலையுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், இந்தத் திட்டத்துக்காக நடப்பாண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
“அண்ணா சாலையில், தினமும் சராசரியாக, 237,686 வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், பத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து நிறுத்தங்கள் உள்ளன.
காலை முதல் இரவு வரை வாகனமோட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நிலையில், சுமார் 3.5 கிலோ மீட்டர் துாரத்துக்கு, உயர்மட்ட மேம்பாலம், நான்கு வழிச் சாலையுடன் அமைக்க முடிவாகி உள்ளது.
ஏற்கெனவே அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், புதிய மேம்பாலம் அமைப்பது தொடர்பாக வெளிநாட்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெற இருக்கிறது.