சென்னை: பணம் கொடுத்து பலரை தமக்கு எதிராகச் செயல்பட வைப்பதாக நடிகர் விஜய் மீது அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி குற்றம்சாட்டி உள்ளார்.
தொடக்கத்தில் சமூக ஆர்வலராக அறியப்பட்ட இவர், பின்னர் தனியாக கட்சி தொடங்கி செயல்பட்டு வருகிறார்.
மேலும், மதுபானம், புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருவது மட்டும் இன்றி போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்.
அண்மையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார் ராஜேஸ்வரி.
“அந்தப் பாடலில் இளையர்களுக்குப் போதை ஏற்றும் வார்த்தைகள் உள்ளன. எனவே அப்பாடலை தடை செய்ய வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.
சர்ச்சைக்குரிய அப்பாடலுக்கு எதிராக ராஜேஸ்வரியின் ஆதரவாளர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி, விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என்றார். இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் அவர் மனு அளித்துள்ளார்.
“நாங்கள் எதிர்க்கும் பாடலில் இடம்பெற்றுள்ள அனைத்து வரிகளுமே, புகை, மது சம்பந்தமாகவே இருந்தது. இது போன்ற வரிகள் இளைஞர்களையும் சிறார்களையும் பாதிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“இக்கருத்துகளை குறிப்பிட்டு நான் அளித்த பேட்டியை சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருந்தனர். இதனால், பணம் கொடுத்து சிலரைத் திரட்டி, சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர்,” என்று விஜய் தரப்பைச் சாடியுள்ளார் ராஜலட்சுமி.

