சென்னை: செங்கல்பட்டு பாமக நிர்வாகி நாகராஜ் என்பவர் ஏழு பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மூவரின் படுகொலையில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
கூலிப்படையினரை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு நகரம் அம்பேத்கர் சிலை அருகில் தனது தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
“செங்கல்பட்டு மணிக்கூண்டு பகுதியில் மலர் வணிகம் செய்து வந்த பூக்கடை நாகராஜ், பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு வணிகத்தை முடித்து விட்டு, வீட்டுக்கு புறப்பட்ட அவரை இரு சக்கர ஊர்திகளில் வந்த 7 பேர் கொண்ட கூலிப்படை சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது. இது முழுக்க முழுக்க காவல்துறையின் தோல்வியாகும்,” என்று அவர் கூறினார்.
மறைமலைநகர் பகுதியில் பா.ம.க. நிர்வாகி மனோகரன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் காட்டூர் காளிதாசன், செங்கல்பட்டில் பூக்கடை நாகராஜ் என கடந்த மே 22ஆம் நாளிலிருந்து இப்போது வரையிலான 50 நாள்களில் பாமக நிர்வாகிகள் மூவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாள்களுக்குமுன் லோகேஷ் என்பவர் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அனைத்திலும் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் படுகொலையில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை அட்டகாசங்களை முழுமையாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் ஒழிக்கப்பட்டதைப் போல தமிழ்நாட்டிலும் கூலிப்படையினர் ஒடுக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.