சென்னை: காவல்துறை முன்னாள் அதிகாரி பெயரில் ‘ஃபேஸ்புக்’ கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை வலைவீசியுள்ளது.
காவல்துறை டிஜிபி எம்.ரவி பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தொடர்ந்து காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவரது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் டிஜிபி எம்.ரவியின் நண்பர்களுக்கு சிலர் குறுஞ்செய்திகள் அனுப்பி உள்ளனர்.
அதில் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்க டிஜிபி எம்.ரவி சிபாரிசு செய்வது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதை உண்மை என்று நம்பிய டிஜிபி ரவியின் நண்பர்கள் மோசடிப் பேர்வழிகளிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்ததாகக் கூறப்படுகிறது.

